
மதவெறுப்பு’ ஏன் என பிரதமர் மோடியிடம் கேட்கணும்! ஜோபைடனிடம் வலியுறுத்திய வாஷிங்டன் போஸ்ட்-சர்ச்சை
நியூயார்க்: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அதிபர் ஜோபைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பிரதமர் மோடிக்காக ஜோபைடன் டின்னர் விருந்தும் அளிக்க உள்ளார். இந்நிலையில் தான் இந்தியாவில் மதவெறுப்பு நிலவுவதாக குற்றம்சாட்டியுள்ள வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை, அதுபற்றி ஜோபைடன், பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கட்டுரை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக நேற்று அமெரிக்கா சென்றார். நியூயார்க் நகருக்கு சென்ற பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன்பிறகு நியூயார்க்கில் அமைந்துள்ள ஐநா சபை தலைமை அலுவலகத்தில் நடந்த சர்வதேச யோகா தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அடுத்ததாக அமெரிக்க அதிபர் ஜோபைடனை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த வேளையில் இருநாடுகளின் உறவு பற்றியும் பேச உள்ளார்.
இந்நிலையில் தான் பிரதமர் மோடியை, அமெரிக்க அதிபர் ஜோபைடன் சந்திக்கும்போது இந்தியாவில் உள்ள ஜனநாயகம் உள்பட சில முக்கிய விஷயங்களை நிச்சயமாக விவாதிக்க வேண்டும் என பிரபல பத்திரிகையான ‛வாஷிங்டன் போஸ்ட்’ கட்டுரை போல் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடனான பேச்சுவார்த்தையின்போது இருநாடுகளின் உறவுகளை வலுப்படுத்த அமெரிக்கா முன்வர வேண்டும். இருப்பினும் மோடி பின்பற்றும் ஜனநாயக முறையை பற்றி பேசாமல் அமைதி காக்க முடியாது. இதனால் அதுபற்றி ஜோபைடன் நிச்சயமாக பேச வேண்டும். ஏனென்றால் இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கும் இந்து தேசியவாதத்தின் கீழ் பாஜக முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது.