
காணாமல் போன கூட்டாளி கொடூர கொலை.. ரவுடி வரிச்சியூர் செல்வம் சிக்கியது எப்படி? அதிர்ச்சி வாக்குமூலம்
மதுரை: வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்தவர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். கூட்டாளி கொலை தொடர்பாக வரிச்சியூர் செல்வம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில் (47). மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்தவர். மதுரை கருப்பாயூரணியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரட்டைக் கொலை வழக்கில் செந்தில் 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த கொலை வழக்கில் வரிச்சியூர் செல்வம் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

செந்தில் மட்டும் கைது செய்யப்படாமல் இருந்தார். நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது 4வது குற்றவாளியான செந்திலை ஏன் இதுவரை கைது செய்யவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதேசமயம், செந்தில் காணாமல் போனதாக அவரது மனைவி முருகலட்சுமி விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இந்த புகார் மீதான விசாரணை கிடப்பில் போடப்பட்டதால், தனது கணவர் செந்திலை கண்டுபிடித்துத் தருமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முருகலட்சுமி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு குறித்து மதுரை ஐஜி அஸ்ரா கார்க் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இந்த மனு தொடர்பாக அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி கருண்காரட் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், காணாமல் போன செந்தில் கடந்த 2021 ஜனவரியில் சென்னையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.