
இனிதான் ஆரம்பிக்கவே போகுது.. தமிழ்நாட்டிற்கு வார்னிங் கொடுத்த வானிலை வல்லுனர்கள்.. இதை முதல்ல படிங்க
சென்னை: தமிழ்நாட்டின் வானிலையில் வரும் நாட்களில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு தெரிவித்து உள்ளது.
வங்கதேசம் மற்றும் மியான்மரை நேற்று மோச்சா புயல் தாக்கியது. 240 கிமீ வேகத்தில் இந்த புயல் காரணமாக கடுமையான காற்று வீசியது.
சூப்பர் சூறாவளியாக இந்த புயல் மியான்மரில் கரையை கடந்துள்ளது.
இந்த புயல் தமிழ்நாட்டை தாக்காத காரணத்தால், தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய மேகங்களை இது இழுத்து சென்றுள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கு கோடை மழை முற்றிலுமாக குறைந்து வெயில் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இயல்பான வெயிலை விட 2-3 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
தற்போது தமிழ்நாட்டில் 39 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை உள்ளது. இது 41ஐ அடையும் வாய்ப்புகள் உள்ளன. இதன் அர்த்தம் வரும் நாட்களில் வெப்பம் கொளுத்த போகிறது.
இன்று தமிழ்நாட்டில் 41 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமான சென்னை போன்ற கடலோர மாவட்டங்களிலும் வேலூர் போன்ற உள்ளூர் மாவட்டங்களிலும் வெயில் உச்சத்தில் இருக்கும்.
இனிமேதான் ஆரம்பிக்க போகிறது : இந்த நிலையில்தான் தமிழ்நாட்டின் வானிலையில் வரும் நாட்களில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு தெரிவித்து உள்ளது.
அதில், #CycloneMocha மிகப்பெரிய அளவில் தீவிரமடைந்து தற்போது தீவிரத்தை இழந்துள்ளது. இந்தியா / மியான்மர் எல்லையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இது வலிமை குறைந்து உள்ளது. இதற்கிடையில், வடக்கு தமிழ்நாட்டின் உண்மையான கோடைகாலம் இப்போதுதான் தொடங்கியுள்ளது.
இதனால் வரும் நாட்களில் பெரும்பாலான இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்று சென்னை ரெயின்ஸ் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை அமைப்பு கணிப்பு: இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்க உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயரும் வாய்ப்புகள் உள்ளன.
வரும் நாட்களில் வெப்பநிலை பல மாநிலங்களில் 100 டிகிரி பேரன்ஹீட்டை தொட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த 3-5 நாட்களில் வடகிழக்கு இந்தியா மற்றும் மேற்கு இமயமலைப் பகுதியைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த கடுமையான வெப்பநிலை நிலவும். தென் இந்தியாவில் கேரளா, கர்நாடகா, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழ்நாட்டு பகுதிகளில் ஆங்காங்கே லேசான மழை பெய்யும்.
ஆனால் மற்ற இடங்களில் வெயில் வாட்டி வதைக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெதர்மேன்
முன்னதாக இந்த நிலையில் சென்னை வானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் போஸ்ட் செய்துள்ளார். அதில், சென்னையில் ஆண்டின் முதல்முறை 40 C வெப்பநிலை இன்று பதிவாகி உள்ளது.
சென்னையில் காற்றின்றி மொத்தமாக எல்லா பகுதிகளும் வறண்டு கிடக்கிறது. சென்னையில் கடல் காற்று அடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன.
மதியம் 3.00 முதல் 3.30 மணி வரை நிலவும் கதிர்வீச்சு வெப்பம் மற்றும் வெப்பச் சேர்க்கை இந்த வெப்பத்தை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன, என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தெரிவித்து உள்ளார்.