
த்ரோபேக்: டேட்டிங் பற்றி வாய் திறக்காத தோனி.. போட்டு உடைத்த தமிழ் நடிகை.. ஐபிஎல் தொடரால் வந்த வினை!
சென்னை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும், இன்றும் உச்சத்தில் இருப்பவர் சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி. கிரிக்கெட் விளையாடிய காலத்திலும் சரி, கிரிக்கெட்டுக்கு பின்னரும் சரி பெரியளவில் சர்ச்சைகளில் சிக்காத சில கிரிக்கெட் வீரர்களில் தோனியும் ஒருவர்.
ஒருமுறை இந்திய அணிக்குள் பிரச்சனை என்று மீடியாக்கள் எழுதிய போது, ஒட்டுமொத்த அணியுடன் செய்தியாளர்களை சந்தித்து அனைவருக்கும் ஆச்சரியம் கொடுத்தவர். ஓய்வை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினால், அவர்களை தோனி எப்படியெல்லாம் கலாய்த்திருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு மனப்பாடமாக தெரியும். அனைத்து விவகாரங்களிலும் வெளிப்படையாக இருக்கும் தோனி, தனது காதல் விவகாரத்தில் மட்டும் மறைமுகமாகவே இருந்து வந்திருக்கிறார்.
2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டது. அப்போது கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளை சினிமா நட்சத்திரங்களான ஷாரூக் கான், பிரீத்தி ஜிந்தா இருவரும் வாங்கினர். இதனால் சினிமா நட்சத்திரங்களும் கிரிக்கெட்டும் சங்கமிக்கும் இடமாகவே ஐபிஎல் தொடர் அமைந்தது. நடிகர், நடிகைகள் போட்டி போட்டுக்கொண்டு மைதானங்களில் குவிந்து வந்தனர். அப்போது சில நடிகைகளுடன் கிரிக்கெட் வீரர்களுக்கும் நட்பு மலர்ந்தது.
அப்போது சென்னை அணியின் கேப்டனாக இருந்த தோனிக்கும் நடிகை லட்சுமி ராய்க்கும் நட்பு ஏற்பட்டது. சென்னை அணி விளையாடும் அனைத்து போட்டிகளுக்கு லட்சுமி ராய் கட்டாயம் ஆஜராகிவிடுவார். இதுகுறித்து தோனி எங்கும் வெளிப்படையாக பேசாத சூழலில், தோனியுடன் டேட்டிங் சென்றது பற்றி வெளிப்படையாக போட்டு உடைத்தார் லட்சுமி ராய். ஆனால் இருவரும் உறவும், திருமணத்தில் முடியவில்லை. இதன் பின்னரே சாக்ஷியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் தோனி.
பாலிவுட்டில் நடித்து வரும் லட்சுமி ராய் ஒவ்வொரு முறையும் ஏதாவது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போதும் தோனியை பற்றி கேள்விகள் வரும். அப்போதெல்லாம் தோனியை குறை சொல்வதை வாடிக்கையாக வைத்து வருகிறார் லட்சுமி ராய். சில ஆண்டுகளுக்கு முன்பாக கூட தோனியுடன் காதலில் இருந்தது என் வாழ்நாளில் செய்த மிகப்பெரிய தவறு என்றும் லட்சுமி ராய் கூறியது குறிப்பிடத்தக்கது.