ராகுல் காந்தியை சந்தித்தார் சித்து.. நாளை காங்கிரஸில் இணைகிறார் !
டெல்லி: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை, முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து வியாழக்கிழமை சந்தித்து பேசினார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து பஞ்சாபில் பிரபல அரசியல்வாதியாகவும் இருந்து வருகிறார். கடந்த 2004 முதல் 2014 வரை எம்பியாக இருந்தார். ஆனால், அடுத்த மக்களவை தேர்தலில் அவரது அம்ருத்ஸர் தொகுதி மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லிக்கு போனது. அப்போது முதல் பாஜக மீது அதிருப்தியாக இருந்தவருக்கு ஆம் ஆத்மி மீது பார்வை திரும்பியது.
டெல்லியில் தனி மெஜாரிட்டியுடன் ஆளும் இக்கட்சிக்கு மக்களவை தேர்தலில் பஞ்சாபில் 3 எம்பிக்கள் உள்ளனர். இதனால், ஆம் ஆத்மியுடன் இணைய அடித்தளம் இட்டவர், ஏப்ரல் 28-ல் குடியரசு தலைவரால் மாநிலங்களை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். அடுத்து மத்திய அமைச்சரவையிலும் சித்துவிற்கு இடம் கிடைக்கும் என கூறப்பட்டது.
இதைவிட அதிகமாக முதல் அமைச்சராக ஆசைப்பட்டவர் ஆம் ஆத்மியின் அர்விந்த் கேஜ்ரிவாலுடன் ரகசியப் பேச்சு வார்த்தை நடத்தினார். இதனால் 12 ஆண்டு இருந்த பாஜகவில் இருந்து கடந்த ஜூலை 18-ல் வெளியேறியதுடன் எம்பி பதவியையும் ராஜினாமா செய்தார் சித்து. பாஜகவில் இருந்து வெளியேறியவர் தற்போது காங்கிரஸில் சேரவேண்டி பேச்சுவாத்தை நடத்தி வருகிறார். இதற்காக அவர் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரான ராகுல் காந்தியையும் சந்தித்து பேசினார்.